செவ்வாய், 12 அக்டோபர், 2021

வேரும் விழுதுகளும்' நாவல் விமர்சனம்.

நண்பர் நித்யாகுமார் (பரிவை சே.குமார்) எழுதிய 'வேரும் விழுதுகளும்' நாவல் விமர்சனம். 

இந்நாவலில் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது தென்தமிழகத்தின் குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பண்பாட்டு அடையாளங்களின் ஒன்றான வட்டாரப் பேச்சு வழக்கு, அந்த மொழிநடையில் சரளமாக எழுதியிருப்பது ஒரு வாசகனாய் என்னை மிகவும் கவர்ந்தது. 

கிராமத்து வாழ்வியலில் வட்டாரப் பேச்சு வழக்கு மொழி மட்டுமின்றி, கிராமத்து வாழ்க்கையே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வரும் காலத்தில்  மறந்தவற்றை மீட்டெடுக்கும் விதமாக ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்காங்கே செல்வது இந்நாவலின் சிறப்பாக நான் கருதுகிறேன். 

'விடிஞ்சு வெள்ளக்கோழி கூவிருச்சு'

'கருக்கல்ல'

'வாடா வடுவா'

'ஆத்துப் பூத்து வருது'

'நான் அக்காடான்னு இருக்கேன்'

'மானம் வெட்டரிச்சுருச்சு'

'பொண்டுகசட்டிப் பய'

'லாத்தலாம்'

'கட்டய நீட்டிக்கிறேன்'

'கட்டுக் கட்டுனும் திரியிற மனுசன்'

'ஏண்டி ஆளாளுக்கு என்னய ஆயிறிய'

என இதுபோன்ற வார்த்தைகளுக்கிடையில் இரட்டை அர்த்தங்கள் தரும் நகைச்சுவை வார்த்தைகளும் நாவலில் ஆங்காங்கே சிறப்பாக வந்திருக்கிறது. மதுரை வட்டார வழக்கு மொழியறியாதவர்கள் இந்நாவலை வாசிக்கையில் மொழிச்சிக்கல் அயர்ச்சியைத் தரும் என்றே நினைக்கிறேன்.

இந்நாவலின் கதைக்கரு ஒரு கிராமத்தில் வசிக்கும் கந்தசாமி தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் தன் பிள்ளைகளுக்கு  சொத்தைப் பிரித்துக் கொடுப்பது என்ற ஒற்றை வரிக் கதையாக இருந்தாலும், அவரை மையப்படுத்தி, அவரின் மகள்கள், மகன்களின் குடும்பங்களை வைத்துப் பிண்ணப்பட்ட கதைக்களம் உரையாடல்கள் மூலமாகவே நகர்த்தப்பட்டாலும் விறுவிறுப்பாகவே நகர்வது நாவலின் பலம்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையும், சொத்து பிரித்தல், கொடுக்கல் வாங்கல் என நகரும் கதைக்குள் கண்ணதாசன் மற்றும் கந்தசாமி என்னும் கதாபாத்திரங்கள் மூலம் கிராமத்து வாழ்வியலைச் சொன்னதுடன்  விவசாயம் செய்வதில் இருக்கும் கஷ்டத்தையும், அத்தனை கஷ்டத்திற்கும் பின்னே கிடைக்கும் ஆத்ம திருப்தியையும்  மெல்லிய உணர்வுகளுடன் மயில்தோகையின் வருடலைப் போல் எழுத்தாளர் கதையில் சொல்லியிருப்பது என்னைப்போன்ற கிராமத்து அடித்தட்டிலிருந்து வந்த வாசகர்களின் உணர்வுகளை  மெல்ல அசைத்துப் பார்க்கத்தான் செய்கிறது.

தீபாவளி, பொங்கல், கோவில் திருவிழாக்கள் போன்ற  கிராமத்து நிகழ்வுகளில் குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்று கூடுவதும், தங்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன மனஸ்தாபங்களைப் பேசித் தீர்த்துக் கொள்வதும் கொடுக்கும் ஆனந்தமும் ஆத்மார்த்த அன்பும் வேறெதிலும் கிடைப்பதில்லை. இந்நாவலை வாசிக்கையில் என் கடந்த கால வாழ்க்கை ஞாபகத்தில் வந்து போனது. 

எங்களுடையது மிகப் பெரிய குடும்பம் - அப்பாவின் குடும்ப உறவுகள், அம்மாவின் குடும்ப உறவுகள் என ஐம்பதுக்கும் மேற்ப்பட்டவர்கள் - எல்லோரும் பொங்கல் திருவிழாவின் போது எங்கள் கிராமத்தில் ஒன்று கூடுவதும், குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்துக் கொண்டாடுவதுடன் குடும்பத்தின் மூதாதையர்களை நினைவு கூறும் விதமாகப் பொங்கல் வைத்து கொண்டாடும் நிகழ்வுகளை இக்கதை என் கண்முன்னே உணர்வுப்பூர்வமாய் நிறுத்தியது எனலாம்.

இன்று குடும்ப உறவுகளுக்குள் போட்டியும் பொறாமையுமே நிறைந்து இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் விட்டுக் கொடுக்கும் மனோபாவமும் சகிப்புத்தன்மையும் இல்லாமல் போய்விட்டதாலேயே குடும்ப உறவுகள் சிதைவடைந்து கிடப்பதைப் பார்க்கும் போது மனம் வருந்துகிறது. 

கண்ணதாசன் தன்மானம் பார்க்காமல் குடும்ப உறவுகளை ஒன்றிணைக்க தன் சித்தப்பா மகளின் கணவர் சுரேஷ் காலில் விழுந்து கும்பிட்டு வீட்டிற்குக் கூப்பிடுவதும், தன் சொந்த மச்சினன் இல்லையென்றாலும் தனது சித்தப்பா மீதும் அந்தக் குடும்பத்தின் மீதும் வைத்திருக்கும் அன்பின் காரணமாக இவன் நம் காலில் விழுந்து விட்டானே என அதுவரை முறுக்கிக் கொண்டிருந்த சுரேஷ் மனம் வருந்தி, தன் பிடிவாத குணத்தைத் தூக்கியெறிவதிலிருக்கும் நெகிழ்ச்சிதான் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துகிறது.

மண் பாத்திரத்தில் சமைத்துக் குடும்பமே கூடியமர்ந்து கைநிறைய வாங்கிச் சாப்பிட்டு, புரையேறிக் கண்ணீர் பெருகும் அளவுக்கு  வாய்நிறைந்த சோற்றோடு உறவுகளின் கேலிப்பேச்சில் மகிழ்ந்து  வாழ்ந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நம்மோடு சேர்ந்து வீட்டுச் சுவர்களும் அந்த மகிழ்வைச் சுமந்து வாழ்ந்த வாழ்க்கை எத்தனை இனிதானது.  இன்றைய பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்கல், அறிவியல் வளர்ச்சி  போன்ற காரணத்தால் கிராமத்து வாழ்வென்பது சிட்டுக் குருவிகளைப் போன்று அரிதாகிப் போய்விட்டது. 

இக்காலத்திற்கு மிகவும் தேவையான நாவல் வேறும் விழுதுகளும்.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...