வியாழன், 30 ஜூலை, 2020

அரசியல்_கற்போம்

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களது எண்ணம், கருத்து, நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அரசியல் இல்லாமல் நீங்கள் உயிர்வாழ இயலாது.

நாற்பது ஆண்டுகளாக அரசியல் நமக்குத் தேவையில்லையென்று ஒதுங்கியேயிருந்தேன். இந்தக் கொரானா காலம்தான் அரசியலின் முக்கியத்துவத்தை, அரசியலில் தேவையை எனக்கு உணர்த்த ஆரம்பித்தது என்று சொல்லலாம்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் என்னைச் சுற்றி இருப்பவர்களின் உந்துதலில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினேன். பணி என்றால் ஊர் ஊராக போஸ்டர் ஒட்டுவதும், கட்சியின் நிதிக்காக உண்டியலேந்தி ஊர் ஊராக அழைவதுமே ஆகும்.  பள்ளிச் சிறுவனாய் மூக்கை வடித்துக்கொண்டு பட்டன் இல்லாத டவுசரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராக நன்பர்களுடன் அழைந்திருக்கிறேன்.

ஒரு கட்டத்தில் கட்சித் தலைவரின் வெள்ளை வேட்டி மெல்ல வெளுக்கத் தொடங்கியது...!
வெண்மை எப்பொழுதும் தன்மீதிருக்கும் அழுக்கைக் காட்டிக் கொடுத்துவிடும் அல்லவா..? அப்படித்தான் எங்க கட்சித் தலைவரின் வேட்டி அமுல் டப்பாவின் துளையிட்ட உண்டியலில் வெளுத்திருக்கும் ரகசியத்தை அறிந்துகொண்டேன். அதிலிருந்து அரசியலிருந்து, இல்லை உண்டியல் சுமப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டேன.

பின்பு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது காங்கிரஸ் கட்சியின் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டது... அதற்கான காரணம் மாட்டுக் கொம்புகளில் அடித்திருந்த பெயிண்டுதான், மாட்டுக் கொம்புகளில் எத்தனையோ வண்ணங்களில் பெயிண்ட் அடித்திருந்தாலும், நமது தேசியக்கொடி கலரில் அடித்திருக்கும் மாடுகள் அதீத மிடுக்காகத் தெரியும்... இந்தியன் என்ற மிதர்ப்பு அதன் முகத்திலும் இருக்கும்.  இந்திரா காந்தியையும், ராஜீவ் காந்தியையும் தெரிந்திருந்த எங்க ஊர் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியைத் தெரியவில்லை இதுதான் அக்கட்சியின் அப்போதைய வளர்ச்சி... இப்பவும் அப்படித்தான் இருக்கு!

எங்கள் கிராமத்தில் தேர்தல் வந்துவிட்டால் எம்ஜிஆர், கலைஞர் இருவரும் பனைமரம், பாழடைந்த வீடு, பள்ளிக்கூட சுவர் என எங்கெல்லாம் இடமிருக்கோ அங்கிருந்து ஊர் மக்களைப் பார்த்து சிரிப்பார்கள், அதுவும் எம்ஜிஆர் மேற்குத் தெருவிலும், கலைஞர் கிழக்குத் தெருவிலிருந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். மேற்கு எப்போதும் கிழக்கை நோக்கி ஆதிக்கம் செலுத்தும்... அதிகாரம் செய்யும்... வெளுத்திருக்கும் கூடவே கொழுத்தும் இருக்கும். இந்த இருவரைத் தவிர வேறெந்த அரசியல்வாதியையும் அப்போது தெரியாது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் திமுக தன் கட்சி இழப்பை, இருப்பை மீட்டெடுக்க ஊர் ஊராக பொதுக்கூட்டம் போட்டுக்கொண்டிருந்தது... அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் அரண்மனையில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. மிளகாய் பஜாரில் அப்பாவுக்கு துணையாக சென்ற எனக்கு அக்கூட்டத்தை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தத.

அக்கட்டத்தில் கலைஞர் கருணாநிதியைக் கைக்கு எட்டும் தூரத்தில் பார்த்து ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது... கருப்புக் கண்ணாடியில் மிகப் பிரம்மாண்டமாகத் தெரிந்தவரை, அதுவரை சுவரிலும் பேப்பரில் மட்டுமே பார்த்து அறிந்திருந்த அந்த முகத்தை அருகில் பார்க்கும்போது ஆடு மேய்க்கும் எங்க பக்கத்து வீட்டு மாயாண்டியைப் போல் அவ்வளவு எளிமையாக இருந்தார்... ரொம்பச் சாதாரணமாகத் தெரிந்தார்.

அக்கூட்டத்தில் தீப்பொறி ஆறுமுகத்தில் தொடங்கி, யார் யாரோ பேசிக்கொடிருந்தார்கள், எல்லோரும் ஆளுக்குப் பத்து நிமிடம்,பதினைந்து நிமிடம் பேசி முடித்ததும் கலைஞர் அவர்கள் பேசத் தொடங்கும்போது இரவு எட்டு மணியாகிவிட்டது.
கலைஞர் தன் தோள் மீதிருந்த துண்டைச் சரி செய்துகொண்டு மைக்கை பிடித்து பேச தொடங்கும்போது இருந்த கூட்டமும், கை தட்டலும் எனக்கு வியப்பாக இருந்தது.  பேசும்முன் எதுக்கு இந்த கைதட்டல்... ஏன் இவர்கள் இப்படி ஆர்ப்பரிக்கிறார்கள்..? என்ற கேள்விகள் என் மூளைக்குள் மண் புழுவைப் போல் ஊரத் தெடங்கியது.

தெடர்ந்து மூன்று மணிநேரம் இடைவிடாத அடுக்கு மொழியிலும், இடையிடையே குட்டிக் கதைகளுடனும், புராணக் கதைகளுடனும் இந்த படுகொலைக்கும் திமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை மக்களிடம் விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் உருக்கும், ஈர்க்கும் பேச்சில் மயங்கியவன் அதுவரை ரோட்டோர சுவர்களில் இருந்த கலைஞரை என் வீட்டுக் கதவில் ஒட்டி அழகு பார்க்க வைத்தது.

என் வீடு வறுமையில் வாடினாலும் கலைஞர் மட்டும் என் வீட்டுக் கதவில் செழுமையாக இருப்பார்.

அதன் பின்னர் பரமக்குடியில் ராஜா சேதுபதி ஸ்கூலில் பதினொன்றாம் வகுப்புப்  படிக்கும்போதுதான் ஸ்டாலின் அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் ஊர் ஊராக சின்னச் சின்ன மேடைகளில் பேசிக் கொண்டிருந்த காலமது... பரமக்குடி ரவி தியேட்டரில் படம் பார்க்கச் சென்ற நான் ஸ்டாலின் ரவி தியேட்டருக்குள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது... அவர் கலைஞரைப் போல் சரளமாகப் பேசவில்லை ஒரு துண்டுச் சீட்டை வைத்து வாசித்துக் கொண்டிருந்தார். இது நான் நேரில் பார்தத உண்மை நிகழ்வு.

அந்தக் கூட்டத்தில் ஸ்டாலினை அருகில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.. டவுசர் போட்ட சின்னப் பையன் என்பதால் என்னை முன் வரிசைக்கு அனுப்பிவிட்டார்கள்... ஆம் பதினொன்றாம் வகுப்புவரை நான் டவுசர் போட்ட பையந்தான். சிறுவர்கள் இளைஞர்களையும் அமரவைத்து போட்டோ எடுத்தார்கள். ரொம்ப மகிழ்வாய் இருந்தது... கதவில் ஒட்டிய கலைஞர் மீதான நேசம் குறையாமல் ஸ்டாலின் மீதும் ஒரு பற்றுதல் உண்டானது.

பின்னான காலங்களில் அதிமுகவும், திமுகவும் தென்மாவட்டங்களில் சாதீய அரசியல் செய்வது புரிய ஆரம்பித்ததும் அரசியல் என்பது சாக்கடை மட்டுமில்லை, அதையும் தாண்டி ரத்தம் பார்க்கக் கூடியதும் என்பதை சில நிகழ்வுகள் எனக்கு உணர்த்தியது. அதோடு அரசியல் என்பது எனக்குத் தேவையில்லாத ஒன்றாக இருந்தது... அதன்பின்னர்  செல்வி ஜெயலலிதாவின் வீட்டில் அள்ளியதாய் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தங்க குவியலும், செருப்புக் குவியலும் மேலும் எனக்குள் அரசியல் மீதான வெறுப்பை வளர்த்தது.

ஒரு கட்டத்தில் குண்டுமணி தங்கம் கூட நான் போடமாட்டேன் என்றும், ஒரு ரூபாய் சம்பளத்தில் பங்களா கட்டும் ரகசியத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்த ஜெயலலிதாவை இரும்பு மனுசியென்று ஊரே புகழும்போது எனக்கும் கொஞ்சம் பிடித்துப் போனது என்பதே உண்மை. உண்மையில் நல்ல மனுசிதான் கூட்டுச் சரியில்லை என்பதையும் அறிய நேர்ந்தது... இங்கு கூட்டுச் சரியில்லையென்றால் குட்டிச்சுவராய்ப் போவாயென என் அப்பா அடிக்கடி திட்டுவதுதான் ஞாபகத்தில் வருகிறது. நம் கூட்டு எப்போதும் சரியா இருக்கணும் என்பதை உணராத, சரியில்லை என்றால் என்னாகும் என்பதை உலகுக்கு உணர்த்தி சென்றவர் ஜெயலலிதா.

இரும்பு மனுசியை கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கத் தொடங்கும்போது... நான் ரசித்த, விரும்பிய, வியந்த தலைவர் கலைஞரை தெருவிற்கு கொண்டு வந்த ராட்சசியின் மீது அதீத கோபம் எனக்கு. என்ன குரூரப் புத்தி... ஒன்னும் செய்யாத குற்றத்திற்காக ஒரு முதியவர் என்று கூட பாராமல் அவர் செய்த அதிகாரம், அடக்குமுறைகள் மேலும் எரிச்சலைத் தந்தது... ஒரு பக்கத்தில் காவலுக்கு காக்கியை அனுப்புவதும், மறுபுறம் கல்லெறிய ஆள் அனுப்புவதும் இவரின் ஆட்சியின் சாதனைகளில் ஒன்று. அதனால் இவரை மட்டும் மன்னிக்க மனம் மறுத்தது.

கடந்த சில ஆண்டுகள் பாலைவனத்தில் வாழும்போது என் வீட்டு முற்றத்தின் வேப்பம் பூ வாசனையின் அருமை புரியத்தெடங்கியது... அதற்கேற்றார் போல் அண்ணன் சீமான் பேச்சிலும், அரசியல் முன்னெடுப்பிலும் மனம் லயிக்கத் தொடங்கியது. பின் தமிழன் என்ற கவர்ச்சியில் அடைப்பட்டு அதில் உறுப்பினரானேன்.

இயற்க்கையை நேசிப்போம், விவசாயத்தைக் காப்போம் என்று முழக்கமிடும் யாருக்கும்  விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.
மண்ணைக் கலந்து எள்ளு விதைப்பதும், மிளகாய் விதைத்தபின் கை எரிச்சல் தாங்காமல் மாட்டுச் சாணத்தைக் கையில் தடவும் எனக்குத் தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியும். ஏசி வீட்டிலிருந்து கொண்டு பூந்தொட்டியில் மிளகாய்ச் செடி நடுபவர்களுக்கும், மொட்டை மாடியில் தோட்டம் போடுபவர்களுக்கும் விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்?? யோசித்தால் சிரிப்புத்தான் வரும்... அதுதான் இன்றைய அரசியலாகவும் இருக்கிறது.

விவசாயத்தை காப்போம்  என்று பேசுபவர்கள் யாரும் விவசாயம் செய்ததில்லை, விவசாயம் செய்துகொண்டிருக்கும் யாருக்கும் தன் பிள்ளையை வேளாண்மை படிப்பைக் கூட படிக்க வைக்க விரும்பமாட்டார்கள். இதுதான் உண்மை.

இப்போது அரசியலறிவு இல்லையென்றால் உன்னால் வாழமுடியாது என்ற நிலையை உணரத் தொடங்கிவிட்டேன். ஆம் எந்தக் கல் எங்கிருந்து எறியப்படுகிறது...  எந்தக் கல் நம்மை காயப்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளவாவது அரசியல் தெரிந்திருக்க வேண்டும்.

அரசியல் புரியவில்லையெனில் எந்த கார்பரேட் நிறுவனங்களிலும் உன்னால் ஒருபடி கூட கடக்க முடியாது என்பதை கடந்த வாரம் நடந்த நிகழ்வுகள் உணர்த்தியது.

தன் வாழ்வை நிலைநிறுத்த அரசியல் முக்கியமான ஒன்று. அரசியல் கற்போம், அரசியல் செய்வதற்காக அல்ல, அரசியல் செய்பவர்களைப் பற்றி அறிந்துகொள்ள.

பால்கரசு
30/07/20

செவ்வாய், 21 ஜூலை, 2020

குட்டிகோரா....சிறுகதை விமர்சனம்.




எழுத்தாளர் தெரிசை சிவா... அமீரக வாசகர்கள் நட்பு வட்டத்திலிருந்தாலும் நாங்கள் இருவரும் அதிகம் பேசிக்கொண்டதில்லை, இருவரும் எங்காவது சந்திக்க நேர்ந்தால், சிறு புன்னகையுடன் நலம் விசாரிப்பது மட்டுமே எங்களுக்குள் நிகழும் அதிகபட்ச உரையாடல்கள்....  புத்தக விமர்சனக் கூட்டமொன்றில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் திரு. வேல ராமமூர்த்தியின் 'குற்றப்பரம்பரை' நாவலைப் பற்றி சிவா விமர்சனம் செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது... கடும் பசியிலிருந்த யானையொன்று கரும்புத் தோட்டத்தில் புகுந்தது போல் அந்நாவலில் பேசப்பட்டவற்றை எல்லாம் நின்று நிதானமாக நாஞ்சில் வட்டார மொழி வழக்கில் அசைபோட்டது சிறப்பாகவும் வியப்பாகவும் இருந்தது.

மதுரைவட்டார வழக்குமொழியில் எழுதப்பட நாவலை நாஞ்சில் மொழியில் விமர்சித்தது வித்தியாசமாக இருந்தது. அன்றுதான் சிவா ஒரு எழுத்தாளர் என்பதையும், அவரின் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருப்பதையும் நண்பர்கள் சொல்லத் தெரிந்து கொண்டேன்.

இச்சிறுகதைத் தொகுப்பு எங்களது வாசகர் வட்டத்தில் நண்பர்கள் பலரால் பரவலாகப் பேசப்பட்ட போதுதான் நாமும் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் பற்றிக்கொண்டது... எனது ஆர்வத்தை தெரிந்துகொண்ட புத்தகத்தின் pdf  file அனுப்பி  வாசிக்கவைத்தார் . 

இச்சிறுகதைத் தொகுப்பில், தோசை, அண்டி, அணுகுண்டு, கும்பாட்டக்காரி, வெத்தலப் பாட்டி, மலையாள பேய்கள், கால்சட்டை, ஆசான், முடியன், குட்டிக்கொரா, உலக்கருவி, நருவல் என பதிமூன்று கதைகளுமே நம் கூடவே வாழும், வாழ்ந்த எதார்த்த எளிய மனிதார்களின் கதைகளாக இருந்தது கூடுதல் சிறப்பு.

இச் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகளை வாசிக்கையில் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை... தனிமையில் இருக்கையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தை நினைத்து, நினைத்து தானாக சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். மற்றொருவரை சிரிக்கவைப்பது அவ்வளவு எளிதல்ல, அதுவும் எழுத்துக்கள் மூலம் ஒருவரை சிரிக்க வைப்பதற்கு அசாத்திய எழுத்துத் திறமை வேண்டும். அந்த அசாத்திய திறமை சிவாவிடம் இருப்பதை ஒவ்வொரு கதைகளையும் வாசிக்கையில் அறியமுடிகிறது.

மனிதனின் மற்ற உணர்வுகளைவிடத் தன்மானம் முக்கியமாக இருக்கிறது.... மானம் போனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை மனிதர்களிடம் மட்டுமே இருக்கிறது... தன்மானத்தை உயிரைவிட மேலானதாக மனிதன் கருதுகிறான்.

 தோசை கதையில்...

விசாரணைக்காக காவல் நிலையம் சென்று வந்த பக்கீர் மனம் நொந்து அவமானத்தில் தலைகவிழ்ந்து அழுகையில் பிரம்மநாயகம் பிள்ளை ஆறுதல் கூறிவிட்டு... போலீஸ் அடிக்க கிடிக்க செய்திருப்பார்களோ என்று கூர்ந்து கவனித்துவிட்டு, சரி விடு பக்கீர்... இதற்குப் போய் கவலைப்படுகிறாய் என்பார். அவரின்
போலிஸ் அடித்திருப்பார்களோ? என்று உற்று நோக்கும்பார்வையில் ஓராயிரம் வலிகள் நிரம்பி நின்றது.

விசாரணைக்காக காவல் நிலையம் சென்றுவிட்டு மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு  நிரபராதி என்ற  தீர்மானத்துடன் வீடு திரும்பிய ஒருவரிடம்.... போலிஸ் அடிக்க கிடிக்க செய்தார்களோ என்ற கேள்வி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் விழுந்த சம்மட்டி அடியைப்போல் இருந்தது. காவல்துறைக்கும், பாதிக்கப் படாதவருக்கும் வேண்டுமானால் சாதாரணமான விசாரணையாகத் தெரியலாம் பாதிக்கப்பட்டவருக்கு அது உயிர்... அவமானம். இதெல்லாம் வாசிக்கும்போது புரியாது அனுபவித்தவர்களுக்குத்தான் அவ்வலி புரியும்.

அண்டி கதையில் புத்தி வளர்ச்சியில்லாத அண்டி, சோறு கிடைத்தால் போதுமென்று  எந்த வேலையானாலும் செய்து கொண்டிருப்பான். அவருக்கும் கோபாலுக்கும் ஏற்பட்ட சண்டையில்  அண்டியை ஊர் மக்கள் பார்க்க குண்டித்துணியை உருவிவிட... அவமானம் தாங்காத அண்டி அழுதுகொண்டிருக்கிறான்... எதைப் பற்றியும் கவலைப்படாத அண்டிக்கும் மானம் என்பது உயிராக இருக்கிறது, ஊர் மக்கள் ஒன்று கூடி படையல் சோறு சாப்பிடுகையில்... முதல் முறையாக எனக்கு பசிக்கவில்லையென்று அண்டி சொல்வதை  வாசிக்கையில் மனம் வலிக்கத்தான் செய்தது... எதையும் சிந்திக்கும் திறனிலாதவனாக இருந்தாலும் அவனுக்குள் மானம் என்ற ஒன்று அவனை எவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறது என்பதை உணர முடிகிறது...

இதேபோல் அணுகுண்டு கதையில் அனு (அனுபாத்திமா) குண்டாக இருப்பதை மாணவர்கள் கேலியும், கிண்டலும் செய்ய... எதார்த்தமாக ராமசாமி ஆசிரியர் அணு  திட்டத்தைப் பற்றி பாடம் நடத்துகையில் மாணவர்கள் அனுவைக் கேலி செய்ய, அவள் மன உளைச்சலில் அழுகையில், ராமசாமி ஆசிரியர் ஆறுதல் கூறி பெற்றோரை வரவைக்க, மகளின் கண்ணீரையும், முக்காடு கலைந்திருப்பதைப் பார்த்த பாத்திமாவின் தந்தையினால் அவமானப்படுத்தப்பட்ட ராமசாமி ஆசிரியர் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் அடைந்து கிடக்கிறார். உயிரைவிட மேலாக ஆசிரியர் தொழிழை நேசித்த ராமசாமி ஆசிரியரால் அவச்சொல்லைத் தங்கிக்கொள்ளமுடியவில்லை. இப்படி மனிதர்களின் மனங்களைப் பற்றியும், சுயமரியாதையைப் பற்றி பல பல கதைகள் இருக்கிறது.

எந்த மருந்தையும் நாடாமல் பல நோய்களை கட்டுப்படுத்த முடியுமெனில் வாய் விட்டுச் சிரி என்கிறாரர்கள்... இச் சிறுகதைத் தொகுப்பை இரவு வாசிக்கையில் தானக வாய் விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்... அவ்வளவு நகைச்சுவை உணர்வுகளை எதார்த்தமா எழுதியிருக்கிறார்.

சிவா வாய் விட்டுச்சிரித்ததை பார்க்கவில்லை என்றாலும் சிரித்து நகரும்படியாக நகைச்சுவை உணர்வுகளை கதையின் ஓட்டத்தில் அள்ளிக் கொடுத்திருப்பார்... தெரு முனையில் நான்கு நண்பர்களைச் சந்தித்து பேசிக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி எதார்த்தமாக இருந்தது பல கதைகள்.

அண்டி கதையில் மழையில் நனைந்துவிடக் கூடாது என்று தினசரி செய்தித்தாளை வாத்தியார் வீட்டின் சன்னலைத்திறந்து போடுகையில்... அந்த அக்காவை விடு... அந்தா அக்காவை விடு என்று அண்டி கத்தி ஊரைக் கூப்பிட, வாத்தியார் மானம் மழையோடு மழையாய் தெருவெங்கும் பரவியது...!

வெத்தலப் பாட்டி கதையில் முடி முளைக்க வைத்திய முறை  செல்லும் போதும்... முடியன் கதையில் ஆட்டுக் கிடாயும்,  சுடலை மாடனும் பேசும் இடங்களிலும் வாய் விட்டுச் சிரிக்காமல் வாசிக்கவே முடியாது என்று அடித்துச் சொல்லலாம்... அத்தனை எதார்த்தன நகைச்சுவைகள் அந்த எழுத்தில்.

கோவிலுக்கு நேந்து விட்ட ஆட்டுக்கிடாயை பலி கொடுக்கவிருக்கும் நேரத்தில் ஆடு தன்னை காப்பாற்றிக் கொள்ளச் சுடலையுடன் பேசும் இடத்தில் தன்னால் அடக்க முடியாத சிரிப்பு எனக்குள்...!

ஒச்சம் இருந்தால் பலி கொடுக்க மாட்டார்கள் என்பதற்காக தன் காலை உடைத்துக் கொண்ட ஆட்டுக்கிடாயை ஊர் மக்கள் யாரும் மதிக்காமல் போக ஆடு தன் கம்பீரத்தை இழந்து உணவின்றி தவிக்கையில் கொஞ்சம் மனம் வலிக்கத்தான் செய்தது. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்ற கண்ணதாசனின் வரிகள்தான் ஞாபகத்தில் வந்தது.
கும்பாட்டக்காரி...

கரகத்தை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். கிழக்கு இராமநாதபுரத்தில் தஞ்சாவூரில் கரக செம்பு என்றும், திருநெல்வேலி மக்கள் கரகக்குடம் என்றும் கன்னியாகுமரி மக்கள் கும்ப ஆட்டம் என்றும் அழைப்பார்கள்.

கோவில் திருவிழாக்களில் மக்களை உற்சாகத்துடன் வைத்திருக்க, இரவு முழுவதும் தூங்காமல் வைத்திருக்க கோமாளிகள் வந்து ஆடுவதுண்டு. இதன் நோக்கம் ஆட்டக்காரர் ஓய்வெடுப்பதாக இருக்கும். கோமாளி அவ்வூர் பேச்சு மொழியில் ஆபாசம் கலக்க நகைச்சுவையாகப் பேசுவார்கள்.... இன்று இக்கலை அழிந்துவிட்டது . 

சடல சாந்தி கதை...

இன்று நாடெங்கும் நடந்துகொண்டிருக்கும் சாதிய ஆணவக் கொலைகளை எடுத்துச் சொல்லும் கதையாக இருந்தது.

தமிழர் மரபில் பெண் தெய்வ வழிபாடு பல நூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆணாதிக்க மனோநிலை கொண்ட சமூகச்சூழலில் எப்படி பெண்கள் தெய்வங்களாயினர் என்ற கேள்வி இயல்பானது. ஆனாலும், எந்த நல்ல காரியம் செய்தாலும் வழிபட்டுத் துவங்கும் பழக்கம் ஆதியிலிருந்தே தொடர்கிறது.

மிங்கூர் ஜமீனுக்கு அம்மணச்சாமியின் மீது அபார நம்பிக்கை. ஜமீனில் நல்லது கெட்டது எதுவானாலும் அம்மணச்சாமியாரின் அருள் வாக்குதான் ஜமீனை இயக்கும்... தன் மகளின் தோழியை நான்காவதாக மணமுடிக்க நினைக்கும் தந்தையை எதிர்த்துப் போராடும் போராட்டத்தில் மகள் செந்தேன் நாச்சியார் மயங்கி கிடக்க... விஷம் குடித்து இறந்துவிட்டதாக நினைக்கிறார் ஜமீன்.... அரச வாரிசுகள் கன்னியாய்ச் சாவது ஜமீனுக்கு அழிவிற்கு வழி வகுக்கும், அதனால் இளம் வாலிபனைக் கொண்டு இறந்த பெண் உடலை புணரச்செய்தால் உடல் சாந்தியடையும் என்ற அம்மணச்சாமியின் ஆலோசனையில் பேரில் குதிரை மேய்க்கும் ஒருவனை ஏற்பாடு செய்திருப்பார் கணக்குப்பிள்ளை... பணமும், அதிகாரமும் இருந்தால் எதையும் வாங்களாம்... ஒரு அடிமையை வாங்க முடியாதா என்ன?

 பிணத்துடன் புணர ஒருவனை ஏற்பாடு செய்துவிட்டு... நீண்ட ஆலோசனைக்குப் பின் கணக்கு... அவன் என்ன சாதிக்காரன் என்று கேட்பார்... அறைக்குள் போனவன் இவள் சாகவில்லை நாடி துடிக்கிறது என்று ஓடிவர ....அவன் உடலில் இருந்த குங்குமத்தைப் பார்த்த ஜமீன்....இருவரையும் ஒரே அரையில் வைத்து தீ மூட்டியதை வாசிக்கையில் ஒரு மனிதனுக்குள் சாதி எந்தளவிற்க்கு வேரூன்றி இருக்கிறது என்பதை உணரச்செய்தது. 

இதேபோல் அப்பா கதையில் நான் என்ன நினைத்தேனோ அதையே வாசிப்பதாக இருந்தது... என் அப்பாவை அமீரகம் அழத்துவர நினைத்தும் அதற்கு என் அப்பா சம்மதிக்கவில்லை... முதல் முதலில் என் அப்பாவை பேண்ட் போடவைத்து அழ பார்த்த போது...பேண்ட்டை கலட்டிப்போட்டுவிட்டு என்தந்தை சொன்ன முதல் சொல்.. .இதென்னடா தம்பி  ஆட்டை காலைக் கட்டிவிட்டது மாதிரியிருக்கு என்றார்... அட போடா...இதெல்லாம் ஒத்துவராது என்றார்... அப்பாவை நேசிக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் இக்கதை பிடிக்கும். 

இப்படி ஒவ்வொரு கதைகளும் வித்தியாசமான கதைகளாக இருந்தது.

குட்டிக்கோரா வாசிக்க வேண்டிய புத்தகம்.

வாழ்த்துகள் தெரிசை சிவா.

-பால்கரசு- 

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...