திங்கள், 10 ஜனவரி, 2022

பேச்சிலர் திரைப்பட விமர்சனம்

 பேச்சிலர் (Bachelor)  திரைப்பட விமர்சனம்

படத்தின் முதல் பாதியில் இன்றைய படித்த இளைஞர்களிடம் அதிகமாகக் காணப்படும் குடி, புகை, கூடாநட்பு போன்றவற்றைப் பார்வையாளர்களின் முகம் சுளிக்காதவாறு காட்டியிருப்பதுடன், இரண்டாம் பாதியில் படித்து நல்ல வேலையில் இருப்பவர்களை இந்தக் கார்ப்பரேட் கலாச்சாரம் எவ்வாறு சீரழிக்க்கிறது என்பதையும் விரிவாகக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

இடைவேளைக்குப் பிறகு கதை வேறொரு கோணத்தில் திசைமாறி நகர்கிறது. கதாநாயகன் ஜீ.வி.பிரகாஷ், படத்தின் கதாநாயகி திவ்யபாரதி இருவரும் ஒரே ஐடி நிறுவனத்தில்  வேலை செய்கிறார்கள், நண்பர்கள் மூலம் அரிமுகமாகி பின் ஒரே அறையில் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறைக்குள் இனைந்துகொள்கிறார்கள். அவர்களுக்குள் எந்தவொரு திட்டமிடுதலும் இல்லாமல் உடலளவில் ஒன்று சேர திவ்யபாரதி கர்ப்பம் ஆகிறாள்.

கருக்கலைப்பு செய்துவிடலாம் என நாயகியைக் கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான் நாயகன . மருத்துவரின் பரிசோதனையின் போது கருவின் துடிப்பையும், அசைவையும் பார்த்தபின் நாயகிக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. கருவைக் கலைக்கும் முடிவிலிருந்து பின்வாங்கி கலைக்காமல் அக்குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என முடிவு செய்து, அதற்கு நாயகனையும் சம்மதிக்க வைக்க முயற்சிக்கிறாள்.

"இதன் பிறகுதான் திரைக்கதை சூடு பிடிக்கிறது"

திருமண வயதைக் கடந்த ஆண், பெண் இருவருக்கிடையில் நடந்த முறையற்ற விசயத்தை முறைப்படுத்த எந்தவொரு முயற்சியும் செய்யாமல், முறையற்ற கருத்தரிப்பு, குடும்ப கவுரவத்தைபாதிக்கும் என்று அவன் பின்வாங்கிக்கொள்ள, அவளின் நிலைமை கேள்விக்குறியாகிறது. 

எப்பொழுதும் ஒரு ஆண் அவன் செய்த தவறுகளிலிருந்து எளிதில் தப்பித்து விடுவதும், பெண் கூண்டுக்கிளியாகி விடுவதும் வேதனைக்குரிய விஷயம் என்றாலும் அதுதானே உலகின் எல்லா இடத்திலும் நடக்கிறது. 

பெண் அவள் தரப்பிலிருக்கும் நியாயத்தை  நிலைநாட்டவும், ஆண் அக்குற்றத்திலிருந்து தப்பிக்கவும் சட்டத்தை எவ்வாறு தங்களுக்குச் சாதகமாக வளைக்கிறார்கள் என்பதையும் மேலும் மேலும் எவ்வாறு தவறுகளை செய்கிறார்கள் என்பதையும் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

ஒரு ஆண் காதலிக்கும் முன்புவரை குடி,புகை என எல்லாத் தவறுகளையும் செய்யும் போது அவனுடைய மானம், குடும்ப கவுரவம் என எதைப் பற்றியும் யோசிப்பதில்லை, ஆனால் திருமணம் என்ற ஒரு வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறைக்குள் வரும்பொழுது மட்டும் குடும்பம், கவுரவம், மானம் மரியாதை என எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான்.  செய்த தவறுகளை மறைக்க, மேலும் மேலும் தவறு செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதுவே ஆற்றாமையின் வெளிப்பாடாக மாறி பல குடும்பங்களில் வன்முறையில் முடிகிறது. 

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களுக்கு எந்தவொரு நீதிமன்றத்திலும் தீர்வு கிடைப்பதில்லை. நீதிமன்றத்தில் தீர்ப்பு வேண்டுமானால் கிடைக்கலாம், அப்படி கிடைக்கும் தீர்ப்புக்கூட விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பாக இருக்குமே ஒழிய இரு உறவுகளுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பைப் போக்கும் தீர்வாக இருக்காது. இதன் மூலம் சிலர் நேரடியாகவும், சிலர் மறைமுகமாகவும் பாதிக்கப்படுக்கிறார்கள் என்பதே உண்மை.

பல குடும்பங்கள் நூலாடை போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வைத் தேடாமல், சட்டத்தின் மூலம் தீர்வைக் காண்பதற்கு முயற்சி செய்கிறார்கள் அது தங்களுக்கு எதிரான திசையில் பயணிக்க ஆரம்பித்தால் அதை வன்மமாக மாற்றி ஒருவரை ஒருவர் பழிதீத்துக்கொள்கிறார்கள். 

குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் மனக் கசப்பை போக்க, முதலில் மனம் விட்டுப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். அது ஒன்றே சரியான தீர்வைக் கொடுக்கும். 


-பால்கரசு-

10/01/2022

சனி, 8 ஜனவரி, 2022

நண்பர்கள் சந்திப்பு

 பாலாஜி அண்ணன் எப்பொழுது அபுதாபி வந்தாலும் எங்கள் மூவரையும் - நான், ராஜா, குமார் - சேர்த்தே அழைப்பதுண்டு. அதேபோல் அபுதாபி வருவதாகவும், மூன்று பேரையும் சந்திப்பதாகவும் நேற்றிரவே தகவல் வந்துவிட்டது.

கடந்த முறை அபுதாபி வந்திருந்த போது ஒருமணி நேரம் காக்க வைத்துவிட்டதால் இம்முறை  நானும் ராஜாவும் முன் கூட்டியே அவர் வரவிருக்கும் இடத்தை அடைந்து விட்டேம். 

பாலாஜி அண்ணன் தயாரிக்கப்போகும் திரைப்படத்திற்கான  திரைக்கதை விவாதத்திற்காக வருகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். அதனால்தான் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் நானும். ராஜாவும் அபுதாபி வந்துவிடுகிறோம் என்ற உத்தரவாதத்தை அவருக்கு கொடுத்தேன். ஆனால் இன்று நிலைமை வேறுவிதமாக இருந்தது. குமார் ரூமைவிட்டு வெளியேற முடியாமல் ஹோம் கோரன்டைன்' ல இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. 

படு விமரிசையாக நடக்கவிருந்த கதை விவாதம் திரு. மோடியின் பஞ்சாப் பயணம் போல பாதியில் நிறுத்தப்பட்டு விட்டதால் விவாதத்தை இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்றுபாலாஜி அண்ணனும் முடிவு செய்துவிட்டார். 

'சரி அப்புறம் என்ன..? சாப்பாடுதான்'

காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரமாக இருந்ததால் நேரடியாக மதிய உணவிற்கே போய்விடலாம் என்று முடிவு செய்து, எந்த ஹோட்டல் போவது என்ற நீண்ட விவாதத்திற்குப் பிறகு... சைவம் என்றால் ஹோட்டல் சங்கீதா  போகலாம் என்றேன்.

பாலாஜி அண்ணனோ அசைவத்தின் மீது ஆர்வமாக இருந்தார். சரி... அப்பன்னா ரித்தாஜ் போகலாம் என்று முடிவு செய்து பாதித் தூரம் போகும்போது...... பிரியாணி சாப்பிடும் எண்ணம் மூவருக்கும் இல்லாததால் மீண்டும் விவாதம்... விவாதத்தின் முடிவில் நலாஸ் ஆப்பக்கடைக்குப் போகலாமா என்று ராஜாவிடம் கேட்டேன், அவரும் போகலாமே என்றார். 

ரித்தாஜ் போகாமல் ஒரு யூடேர்ன் எடுத்து நலாஸ் ஆப்பக்கடை முன்பாக காரை பார்க்கிங் செய்துவிட்டு மூவரும் கடைக்குள் புகுந்தோம் வரவேற்பு மிகவும் கனிவுடன் இருந்தது.

எந்தக் ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனாலும் அது குற்றம், இது குற்றம், அவன் கேட்ட ஸ்டைலே சரியில்லையே என ஏதாவது ஒன்றின் பின்னே நின்று குதிக்கும் ராஜா, பில் பேட்டுப் போகும்போது கடுமையான விவாதத்துடன் தான் அந்தக் கடையை விட்டு வெளியே வருவார், வருவோம். ஆனால் இங்கே நிலைமை வேறுவிதமாக இருந்தது. 

"என்ன சாப்பிடுகிறீர்கள்..?" எனக்கேட்டான் சர்வர் தம்பி திரு. ஜாபர். 

எப்பவும் போல் வழக்கமான கிண்டல் கேலியுடன் தொடங்கிய உரையாடலுக்குப் பின் "அண்ணே! ஒரு மட்டன் கறி, சிக்கன் பாயாவுடன் ஆப்பம் தருகிறேன் சாப்பிடுங்கள் நல்லாயிருக்கும்"  என்று ஆட்டத்தைத் தொடங்கும் ஆர்வத்தில் சொன்னான் சர்வர் ஜாபர தம்பி. 

"சரி... கொண்டு வா...ஆனா நல்லா இருக்குமா..?" என்ற எங்களின் கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு "நீங்க சாப்பிட்டுப் பாருங்கள்...நல்லா இருக்கும்" என்றான் அதே கனிவுடன்.

அந்த தம்பி சாப்பாட்டுத் தட்டை டேபிள் மீது வைக்கும்போதே தெரிந்து விட்டது அந்த தம்பியிடம் பணிவுடன் சேர்ந்து பரிமாறும் நற்பண்பு இருப்பது.

ஆப்பம் என்றால் மலையாளி ஹோட்டல்களை பெருமையாக செல்வார்கள். நீங்கள் நலாஸ் ஆப்பக்கடையில் ஆப்பம் சாப்பிட்டுப் பாருங்கள்... பொன் நிறத்தில் நல்ல மொறு மொறுப்புடன் அவ்வளவு ருசியாக இருக்கிறது. ஆப்பக்கடை என்று பெயரளவில் மட்டுமில்லை ருசியிலும் சிறந்து விளங்குகிறது. 

ஆளுக்கு இரண்டு ஆப்பம் முடித்தபோது பாலாஜி அண்னன் தம்பி ஆளுக்கொரு  பொரட்டா சொல்லுவோமா எனக் கேட்க, நாங்களும் சரி என்றோம். 

"தம்பி பொரட்டா கேப்ப ரொட்டி மாதிரி நமக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் கடையில் கொடுப்பார்களே அதுமாதிரி இருக்கக்கூடாது... நம்ம மதுரைக்காரவுக மாதிரி அடிச்சு, எடுக்கும் போதே சும்மா பொழுபொழுன்னு கொட்ட்னும் அது மாதிரி கொண்டு வா" என்றார். 

எல்லாவற்றையும் கேட்ட அந்த தம்பி  ஜாபர் சுவையான பொரட்டாவுடன் புன்னகையையும் சேர்த்தே பரிமாறினார்.

"அண்ணே! இதோட போதும்"  என்ற எங்களைப் பார்த்து அந்த தம்பி ஜாபர் விடுவதாக இல்லை...

"சீரகச் சம்பா அரிசியில் செஞ்ச மட்டன் பிரியாணி இருக்கு...  நல்ல டேஸ்ட்டா இருக்கும், சாப்பிட்டுப் பாருங்கள்" என்றான்.

பாலாஜி அண்ணனோ "டேய் தம்பி உன்ன மாதிரி ஒரு ஆளத்தாண்டா தேடிக்கிட்டு இருக்கேன்... பேசாம என் கடைக்கு வந்திரு" அப்படின்னு சொல்ல, அவனும் "சரிண்ணே" என்றான்.

"அய்யோ இதுக்கு மேலே பிரியாணி வேறயா? போதும்" என்ற எங்களை அவன் விடுவதாக இல்லை.

"அண்ணே... ஒரே ஒரு பிரியாணி வாங்கி மூவரும் சாப்பிடுங்கள்" என்றான் . 

"சரி... தம்பி ஜாபர் ஆசைப்படுகிறான் கொண்டு வரட்டும்" என்றார் ராஜா. 

அவனும் கொண்டுவந்த பிரியாணியை மூன்று பேருக்கும் பகிர்ந்து பரிமாறிவிட்டு, நாங்க சாப்பிட்டுப் பார்த்ததும் "அண்ணே! பிரியாணி எப்படி இருக்கு..?"என்று கேட்க, "டே... நீ சத்தியமா மதுரைக்காரன்தான்டா" என்றார் பாலாஜி அண்ணன். 

மூவரும் பிரியாணியை சாப்பிட்டு முடித்தவுடன், "அண்ணே...! சேடாவுடன் லெமன் இல்லாட்டி சால்ட் போட்டுத் தருகிறேன்... சாப்பிடுங்கள் என்றான் அந்த தம்பி ஜாபர். 

"அய்யோ போதும்பா என்றாலும் அவன் எங்களை விடுவதாக இல்லை... அப்படினா லெமன் டீ சாப்பிடுங்கள், புதினாவும் சேர்த்து போட்டுச் சாப்பிடுங்கள், செரிமானத்திற்கு நல்லது என்றான்.

இருபத்தி ஐந்து வயதிருக்கும் அந்த தம்பி போன்ற வேலையாட்கள் இருந்தால் எந்த ஒரு நிறுவனம் தோல்வியடையாது என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.

டேஸ்ட்டான சாப்பாடுடன் அன்பாகப் பரிமாறும் அந்த ஜாபர் தம்பியை எங்கள் மூவராலும் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. 

பொதுவாக எந்தவொரு நிகழ்ச்சியானாலும் குமாரை விட்டுவிட்டு நாங்கள் தனியாக கலந்து கொண்டது கிடையாது. இன்று குமார் இல்லாதது எனக்கு பெரும் வருத்தத்தைக் கொடுத்தது.


திங்கள், 3 ஜனவரி, 2022

பெண்ணச்சி நாவல் விமர்சனம்

 பெண்ணச்சி

திருமண வாழ்க்கை சிலருக்குச் சோதனையாகவும், வேதனையாகவும் அமைந்துவிடுவதைப் பார்க்கும் போது நம்மால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. 

கணவனுடன் வாழமறுத்த மனைவி... மனைவியைக் கைவிட்டு நீண்ட காலமாக விலகி இருக்கும் கணவன்... இவர்களுக்கிடையில் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை இன்று நடந்த ஒரு சம்பவமும், நான் வாசித்த நாவலும் என் மனதை நொறுங்கச் செய்தது.

அக்கா உங்க வீட்டில் ரேசன் அரிசி இருந்தால் கொடுங்கள், அம்மா உங்களிடம் கேட்க யோசிக்கிறார்கள், உங்கள் ரேஷன் கார்டில் நான் மாதம், மாதம் அரிசி வாங்கிக்கொள்கிறேன், அப்படியே அண்ணன் போட்ட பழைய பேண்ட், சட்டை எதாவது இருந்தால் கொடுங்கள், எனக்கு நாளைக்கு (யுனிவர்சிட்டியில் டீச்சர் போஸ்ட்) இண்டர்வியூ இருக்கு இப்படியே போனால் என்னைத் தேர்வு செய்ய மாட்டார்கள்...! எனக்கு உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை, வேறு யாரிடமும் உதவி கேட்பதில் எனக்கு விருப்பமும் இல்லை, உங்களுக்கு மட்டும்தான் எங்கள் நிலைமை என்னவென்று தெரியும்...! என் அப்பா மட்டும் எங்களைக் கைவிடாமல் இருந்திருந்தால் என் நிலைமை இப்படி இருந்திருக்காது....! எனற இளைஞனின் வார்த்தைகளுக்கிடையில் வடிந்த கண்ணீர் ஒரு யுகத்தின் மொத்த வலி.

கனவன் மனைவிகளுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாட்டால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட குறுநாவலான 'பெண்ணச்சி' பேசியிருக்கிறது, அதேதான் மேலே சொல்லப்பட்ட இளைஞனின் நிலையும். அந்த நாவலின் மொழிபெயர்ப்பு வேண்டுமானால் படு மோசமாக இருந்திருக்கலாம், ஆனால் அந்நாவலில் பேசப்படும் மையக்கருத்து இன்றைய தலைமுறைக்கு அவசியமானதாகவும் தேவையாகவும் இருக்கிறது.

இந்நாவலில் ஒரு பெண் எழுத்தாளரின் வாழ்க்கைச் சம்பவங்களையே கதைக் கருவாக எடுத்துக்கொண்டு அக்கதை மாந்தர்களின் நிலைப்பாட்டை சரி என்றோ, தவறு என்றோ எந்த இடத்திலும் நியாயப்பாடுத்தாமல் நடுநிலையுடன் கதையை நகர்த்தியிருப்பதில் திரு. வெள்ளியோடன் வெற்றி கண்டுள்ளார்.

கதையின் நாயகி சுசிலா திருமணத்திற்குப் பிறகு குடும்பம் என்ற வட்டத்திற்குள் தன்னை இணைத்துக்கொண்டு காதலுடன் சுதந்திரக் கற்றை சுவாசிக்க விரும்புகிறாள், ஆனால் விதி வேறு விதமாக இருக்கிறது. அவள் நினைப்புக்கு மாறான வாழ்க்கை அவளை நரகத்தில் தள்ளியதாய் நினைத்து தனக்கான காதலால் தன் வாழ்வை சொர்க்கமாக்கிக் கொள்ளலாம் என்ற விடுதலை உணர்ச்சிகளோடு பெற்ற குழந்தை, கணவன் உறவினர்கள் என எல்லாரையும் தூக்கி எறிந்துவிட்டுச் சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவர்களில் புகழ்சசியை உண்மையெனக் கருதி போலியான மனிதர்களின் காதல் என்னும் மாய வலைக்குள் மாட்டிக்கொண்டு தன்னை மட்டுமில்லாமல் குடும்பத்தையும் சேர்த்தே சிதைத்து விடுகிறாள்.

நவநாகரீக உலகில் மாறிவரும் குடும்பக் கலாச்சாரப் போக்கு கவலையளிப்பதாக உள்ளது. தனது துணைக்குத் துரோகமிழைத்து வேறு துணையை நாடுவது, பிரச்சினை தலை தூக்கும்போது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போகும் மேம்பட்ட மனப்பாங்கு இல்லாதது, தேவையற்ற"ஈகோ' வை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவையே விவாகரத்துக்கு காரணமாக இருக்கிறது.

எது பெண்ணியம்..? 

எது ஆண் ஆதிக்கம்..? 

எது சுதந்திரம்..? என்பதை அவளால் புரிந்து கொள்ளமுடியாமல் குடும்பம் என்ற பந்தத்தை விட்டு பறக்க விரும்பி காதல் என்ற கூண்டுக்குள் சிக்கித் தன்வாழ்வை எவ்வாறு தொலைக்கிறாள் என்பதும், அதனால் உறவுகள், மற்றும் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கபப்டுகிறது என்பதை பெண்ணச்சி நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று நீதிமன்றங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்குகளில் அம்பது சதவிகிதத்துக்கும் அதிகமானவை கணவன் மனைவிக்கு இடையிலான விவாகரத்து மற்றும் கருத்து மோதல் தொடர்பானவை என்றும் அதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதும் அதிர்ச்சியைத் தருகிறது.


-பால்கரசு-

03/01/2022

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...