சனி, 31 ஆகஸ்ட், 2024

கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்

இயக்குனர் வினோத்ராஜ் (P.S. Vinoth Raj) இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த 'கொட்டுக்காளி' திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். மலையாளத் திரைப்படங்களைப் பாருங்கள், அவர்கள் திரைக்கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்! தமிழில் கதைக்கா பஞ்சம்? ஏன் இவர்கள் கதையில் இவ்வளவு கஞ்சத்தனம் காட்டுகிறார்கள் எனக்  கொக்கரிப்பவர்களுக்கு, சிறந்த திரைக்கதையில் படம் எடுப்பதில் நாங்கள் தான் முன்னோடி என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் இயக்குனர் வினோத்ராஜ்.

படத்தின் திரைக்கதை அதிகாலையில் குடும்ப உறவினர்களின் பயணத்தில் தொடங்கி பல்வேறு கோணங்களில் விரிகிறது....! 

பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாமா மகளைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்ட போது, இல்லை அவள் மேலும் படிக்கட்டும் என்று சொல்லிவிட்டு வெளிநாடு சென்று விடும் பாண்டி (சூரி), மூன்று ஆண்டுகள் கழித்து திரும்பி வந்து பார்க்கும்போது அங்கு நிலைமை வேறாக இருக்கிறது. முறைப் பெண் மீனா (அன்னா பென்) கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது வேறு சாதிப் பையனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். மூன்று வருடம் கழித்து ஊருக்கு வந்திருக்கும் பாண்டியைக் கட்டிக் கொள்ளமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்.

அந்தக் காதல் விசயம் அவள் குடும்பத்தினர்களுக்கு தெரிந்த நிலையில், இந்த ஆண் ஆதிக்க  முரட்டுப் பய குடும்பத்தில் போய் சிறகு உடைந்து கிடப்பதை விட எங்காவது சுதந்திரமாக பறக்கட்டும் என்று நினைக்கிறாள் அவளது  தாய்.

வீடு திரும்பிய பாண்டிக்குத் தொண்டை கட்டியிருப்பதால் அவனின் தங்கை தொண்டையில் சுண்ணாம்பு போடும் போது, 'இவள் நம்ம குடும்பத்திற்கு வேண்டாம்ண்ணே...' என்று அக்கா சொல்லும் போது பாண்டி எப்படிப்பட்டவன் என அவனது முரட்டுத்தனமான நடவடிக்கைகள்  பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது. 

பாண்டி குடும்பத்திற்குப் பயந்து மீனாவிற்கு பேய் பிடித்திருப்பதாக, அந்தக் குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளனர் மீனாவின் குடும்பத்தார். அவர்களும் அப்படியே நம்புகின்றனர்.

எழுபது எண்பது காலகட்டத்தில் மகளின் தவறுகள் வெளியில் தெரியாமலிருக்க, மகளைக் காப்பாற்ற தாய் எடுக்கும்  ஒரே ஆயுதம் காத்துக் கருப்பு பேயாகத்தான் இருக்கும். அப்படியே மீனாவின் அம்மாவும் தன் மகளைக் காப்பாற்ற நினைக்கிறாள்.

பேய் பிடித்த மீனாவைப் பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அந்தப் பயணத்தில், குடும்பத்தினர் இடையிலான உரையாடல் மற்றும் செயல்பாடுகளின் வழியாக, உண்மையில் யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது? அது எப்படிப்பட்ட பேய்? அதற்கான சிகிச்சை என்ன? என்பதை நுட்பமான காட்சிகளின் வழியாக உணர்த்திச் செல்கிறது திரைக்கதை. 

படத்தின் முதல் காட்சியில் சாமியாருக்குப் பலி கொடுக்க வேண்டி கல்லில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் சேவல், அதிலிருந்து விடுபட தொடர்ந்து போராடித் தோற்கும் காட்சியை கதாநாயகி மீனா இறுகிய முகத்துடன் கவனிப்பதன் ஊடாக பார்வையாளர்கள் மத்தியில் அவள் அந்த வீட்டிற்குள் இருக்கும் நிலையையும், ஒட்டு மொத்த சமூகத்தில் பெண்களின் நிலையையும் பிரதிபலிக்கிறது.  

கிராமத்தில் வாழ்ந்து, இப்படியான வாழ்க்கையை அனுபவித்தவர்களால் மட்டுமே இத்திரைப்படத்திலிருக்கும் அத்தனை விசயங்களையும் உள்வாங்கிக்கொள்ள முடியும், அதுவும் குறிப்பாக மதுரை வட்டார மொழி வழக்கில் இருக்கும் நகைச்சுவையான உரையாடல்கள், சேவல், ஆட்டோ,மாடு என அத்தனையும் இப்படத்திற்கு வலு சேர்த்துள்ளது.  

பயணங்களுக்கு நடுவில் வரும் உரையாடல்கள், மாப்ள இங்க பாருடா... படும் காடா இருந்த இடங்கலெல்லாம் இப்ப பெரிய பெரிய வீடா முளைச்சிருக்கு... ! இன்னைக்கு இந்தப் பக்கம் ஒரு செண்ட் இடம் வாங்க முடியாது. அப்பவே இந்தப் பக்கம் ஒரு இடம் வாங்கித் தரச் சொன்னதற்கு எங்க அண்ணன் இங்கிட்டெல்லாம் வேணாம்னு சொல்லிட்டான். நான் எப்படியாவது ஒரு இடம் வாங்க வேண்டும் என்று  பேசிக்கொண்டே  டாஸ்மாக்கைத் எங்கே இருக்கிறது என்று தேடி அலைவது இன்றைய நிலையில் தமிழகத்தில் போதை என்பது வாழ்வியலோடு ஒன்றாகிப் போனதையே காட்டுகிறது.

குடிக்கும் போது அவள் இனிமேல் மாற மாட்டாடா... அவள் சுகம் கண்டுக்கிட்டா, அவன் கை வச்சுட்டான் என்று பழி சுமத்துவதும், இதை வேறு யார்க்கிட்டயும் சொல்லிடாதே என்று சொல்வதும் இயல்பான கிராமத்து பேச்சைக் கண் முன் நிறுத்தியது.

உடல் உபாதைகளைக் கழிக்கும் காட்சியில் பாண்டி நடு ரோட்டில் உட்கார்ந்து கொண்டும், சிலர் நின்று கொண்டும், ஒரு செடியில் சடச்சடவென்று சிறுநீர் கழிப்பதும், அதே சமயத்தில் பெண்கள் காட்டுக்குள் ஆள் அரவற்ற இடங்களில் மறைந்து கொள்வதும்  இச்சமூகத்தின் முரண்பாடுகள். இப்படிப்பட்ட ஆண்கள்தான் ஒழுக்கத்தைப் பற்றி பெண்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்.  

குலதெய்வ வழிபாட்டில், நான் வீட்டிற்கு தூரமாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பாண்டியின் தங்கை ஆட்டோவில் இருப்பதும், அதே சமயத்தில் மீனா குலதெய்வத்திடம் மனம் உருகி வேண்டுவதும்,  பின் மீனாவின் தாய் ஒற்றைப் பார்வையில் வாடி..என்று காட்டிற்குள் அழைத்துச் செல்வதும், போனவளைக் காணோம் போயிப் பாருங்கடி என்று கத்துவதும், அடியாத்தி... என்று பாண்டியின் அக்கா ஓடிய வேகத்தில் மீனாளுடன் அமைதியாக திரும்பி வருவதிலிருக்கும் அமைதி ஒரு புதிர். 

எங்கோ தொலைவிலிருந்து வரும் பாட்டைக் கேட்டுவிட்டு மீனா அப்பாட்டை வாய்க்குள் முணுமுணுக்கும் போது பாண்டி அவளது மனநிலையை அறியமுடியாத கையறுநிலை  வரும்போது ஆற்றாமையின் வெளிப்பாட்டில் வெடித்துச் சிதறி வன்முறையில் இறங்கி அப்பா, மாமா அக்கா என யாரையும் விட்டு வைக்காமல் அடிக்கும் காட்சியில் ஒட்டுமொத்த ஆண்களின் மனநிலை இதுதான் என்பதைப் போல் அறிய முடிகிறது. இவளைக் கட்ட வேண்டாம் என்று சொல்லும் அதே பாண்டியின் தங்கை, அடிக்காதே என்று இடையில் விழுந்து மறைக்கும் காட்சி, உறவுகளின் பாசத்தைக் காட்டுகிறது. 

மீனா எல்லா அடியையும் வாங்கிவிட்டு ஆட்டோவில் இருக்க, தாய் தண்ணியாவது குடிடீ...அவனுங்க அடிக்கும் அடியை தாங்க தெம்பாவது வேனும்ல என்று சொல்லும் காட்சி, அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு அவள் பாண்டியின் அக்கா மகனைப் பார்த்து புன்னகைக்கும் காட்சி பிரமாதம்,  அவளின் மனதை மட்டுமில்லை பெண்களின் மனநிலையை ஒரு போதும் ஆண்களால் புரிந்து கொள்ள  முடியாது என்பதாகவே இருக்கும்.

போகும் வழியில் நடுரோட்டில் காளை ஒன்று குறுக்கே நிற்க, தன்னை ஒரு வீரனாக காட்டிக் கொண்ட பாண்டி போய் மாட்டை பத்தி விடுப்பா என்பதும், குத்த வந்த மாட்டைப் பார்த்து எல்லோரும் பயந்து ஓடுவதும், அதே சமயத்தில் மாட்டின் உரிமையாளர் ஏ.. தங்கச்சி அந்த மாட்டைப் பிடித்துக் கட்டுமா என்றதும் , பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி மாட்டை வாவெனப் பிடித்துச் செல்லும் காட்சி பிரமாதம். பெண்களை அடக்கி ஆளும் ஆண்கள் ஒரு காளை மாட்டிடம் தோற்றுப் போவதும், அதே சமயத்தில் சீறிப் பாயும் காளை கூட ஒரு சிறுமியின் பாசத்திற்கு கட்டுப்படுவதும், ஆண்களின் அதிகாரத்தில் எதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதாகவே அக்காட்சி அமைந்திருக்கும் 

படத்தின் இறுதிக் காட்சியில் சாமியார் பேய் விரட்டும்  மற்றொரு பெண்ணுக்கு  மருந்து எடுப்பதைப பார்த்த பாண்டியன் மனநிலை மாறுகிறது. அடுத்தவனைக் காதலிப்பதை விரும்பாத பாண்டி, சாமியார் அந்தப் பெண்ணை எங்கெல்லாமோ தொட்டு மந்திரிக்கும் காட்சியைப் பார்த்துப் பின்வாங்கும் காட்சியுடன் திரைக்கதையை முழுமையடையாமல் பார்வையாளர்கள் மத்தியில் வைத்துவிட்டார் இயக்குனர்.

சூரி மற்றும் அன்னா பென் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. பின்னனி இசை இல்லாமல் பயணிக்கும் பாதையில் கேட்கும் சப்தங்களையே இசையாக்கி இப்படத்தினை இயக்கி இயக்குனருக்கு வாழ்த்துகள்.

புதன், 28 ஆகஸ்ட், 2024

வாழை திரைப்பட விமர்சனங்கள்


ஒரு நல்ல படைப்பு வெளிவரும்போது நாம் அதைக் கொண்டாடித்தான் ஆகவேண்டும். அதை விட்டு விட்டு அதற்குள் சாதிய அடையாள வன்மங்களைப் புகுத்திப் பார்க்கும் மனநிலை சரியானதல்ல. என் வாழ்வியலோடு தொடர்புடைய திரைக்கதை என்பதால் இப்படத்தைப் பார்த்த அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கமில்லை! 

படத்தின் முதல் காட்சியில் சிவனைந்தன் பாறைகளுக்கு நடுவில் நின்று கொண்டு "ம்பா...ம்பா.... எனக் கதறும் அந்தக் கதறல்களில் சகல வலிகளையும் கடத்தும் கதறலாகவே உணர முடிந்தது!  

வாழை இலைகளிலிருந்து பறக்கும் காகங்கள், வீடு காக்கும் அரசன், கொடி பிடித்த அரசன், ஒரு வாழைப் பழத்தினால் அய்யோனும் அழைகிறான் என்ற சாமக் கோடாங்கியின் வாக்கு, கூடவே ஆடு, மாடு, நாய் குரைத்தல் என மூன்றே காட்சிகளில் படத்திலுள்ள மொத்த வலிகளையும் பார்வையாளர்களுக்கு கடத்திவிட்டார், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலிகளைச் சொல்கிறேன் என்று கர்ணன் படத்தைப் போல் வன்முறைக் காட்சிகளை பதிவு செய்யாமல் அனைத்து தரப்பு  மக்களும் பாராட்டும் விதத்தில் படத்தை எடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

ஊர் மக்கள் வாழைக்காய் சுமக்க முன்பணம் பெற்று 

முதலாளித்துவத்தின் அடிமையாக இருக்கும் நிலையைப் போல் பொது சமூகத்தில் தினக்கூலிகளாக பல்வேறு தொழில்களிலும் முன்பணம் பெற்று அடிமைகளாக வாழும் நிலை காலம் முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உழைப்பிற்கு கூடுதல் கூலி கேட்கும் போது கூடுதலாக பணிச் சுமையும் சுமத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. விளையும் பொருள்கள் முதற்கொண்டு உற்பத்திப்பொருள்கள் வரை முதலாளிகள் காலடியில் உழைப்பாளிகள் என்றும் மிதிபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இதை தான் வாழை திரைப்படம் தொழிலாளர் உழைப்புச் சுரண்டலைப்  பொதுவுடமை பார்வையில் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது! 

பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்து வரும் சிவனைந்தன் பள்ளிநாள் தவிர மற்ற விடுமுறை நாட்களில் அவன் வாழைத்தோட்டத்துக்கு சென்று வாழைக்காய்களைச் சுமந்து வறுமையில் வாழ்க்கையை சும்ந்துகொண்டிருக்கும் தாய்க்கு உதவ வேண்டும். அதுவும் சாதாரண சுமை அல்ல. இரண்டு வாழைத்தார்களை தலையில் ஏற்றி வயல், வரப்பு, சேறு, சகதி வழியேஅவற்றை தூக்கிக் கொண்டு வந்து லாரியில் ஏற்றவேண்டும். இந்தச் சுமையை அவன் மட்டுமல்லாமல் தாய்,அக்கா,அவனது உற்ற நண்பர்கள் கூட சுமக்கிறார்கள். 

 பள்ளியில் சேகர், சிவனைந்தன் செய்கிற அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. இதில் சேகர் கமல் ரசிகனாகவும், சிவானந்தன் ரஜினி ரசிகனாகவும் வருவதை வைத்தும் படத்தின் பிரதான நகைச்சுவை அமைந்திருக்கிறது. கைக்குட்டையை நாசியில் நுகர்ந்ததும் இசைஞானியின் இசையில் வெளிவந்த 'பூங்கொடிதான் பூத்ததம்மா…’ பாடல் ஒலிப்பது அற்புத ரசனை. 'இளையராஜாவின் இசையை தவிர்த்து உங்களால் ஒருபோதும் கடந்து போக முடியாது'

கலையரசன் ஊர் மக்களை ஒன்று சேர்த்து சுமக்கும் காய்களுக்கு ஒரு ரூபாய் கூலியை  கூட்டிக் கேட்டு  வேலை நிறுத்தம் செய்ததின்  பலன் என்ன என்பதை சிவப்பு சிந்தனையில் நாம் அறிய முடிகிறது! 

காதல் என்றால் என்ன என்று தெரியாத பருவத்தில் ஆசிரியையே காதலிக்கலாமா என்றெல்லாம் எந்தவிவாதமும் நிகழ்த்தாமல் உள்ளத்தில் ஊற்றெடுத்த அன்பை அவர்கள் வெளிக்காட்டி இருப்பது அத்தனை இயல்பு. அந்த இயல்பைப் புரிந்து கொண்ட நிகிலா டீச்சரின் கள்ளம் இல்லாத கலையான முகம் அந்தக் காதலைக் கொச்சைப்படுத்தாமல் பாசத்துடன் கடந்து  செல்லும் காட்சி அருமை!

சிவானந்தன் அம்மா, அக்காவாக வரும் ஜானகியும, திவ்யா துரைசாமியும் கூட மண்ணின் மக்களாக அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும் ஜானகியின் இறுக்கமும், தீர்க்கமும் நடிப்புக்கு அப்பாற்பட்டது. கையில் அரிவாள், சுத்தியல் பச்சை குத்தி, உழைக்க வேண்டியதன் அவசியத்தை மகளிடமும், மகனிடமும் விளக்கும் இடம் அருமை!

மாடு வயலில் மேய்ந்து விட்டது என்பதற்காக மாட்டைப்  பொது இடத்தில் கட்டிவிட்டுத் தகராறு செய்யும்போது பணத்தை விட மானம் தான் முக்கியம் என காதிலிருந்த பொட்டுத் தங்கத்தையும் கழற்றி வீசியெரியும் காட்சியில் தன்மானத்தின்  முக்கியத்துவம் படர்கிறது!  

வாலிபமும், வாழ்வுரிமையும் ஒரே புள்ளியில் முட்டிக் கொண்டு நிற்கும் தருணத்தில்  கலையரசன், திவ்யா துரைசாமிக்குமான காதல், ரசிக்கும்படி இருந்தாலும் கையில் வைத்துக்கொண்ட மருதாணி அழிவதற்குள் காதலும் ஓடையில் அழிந்து பார்வையாளர்களை சோகத்திற்கு உள்ளாக்கியது!

படத்தின் கடைசி அரை மணி நேரம் எதை கவனிப்பது, எதை விடுவது… எந்தத் துன்பத்தைப் பெரிதாக நினைப்பது என்று புரிந்து கொள்ள முடியாத அளவில் அத்தனை துயர்கள் அடுத்தடுத்த நிகழ…அதையெல்லாம் மிஞ்சிய சிவானந்தன் பசித்துயர் நம் வயிற்றை மட்டுமல்லாமல் இதயத்தையும் பிசைகிறது. 

உணவின் தேவை எத்தனை அவசியம் என்பதை நம் உணர்வு நரம்புகள் வழியாக நெஞ்சுக்குள் கடத்தியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். 

ஆயிரக்கணக்கான வாழைக்காய்களைத் தலையில் சுமந்தாலும் பசிக் கொடுமைக்காக ஒரே ஒரு வாழைப்பழத்தை உண்ணப்போய் பொன்வேல் வாங்கும் அடி வாழையடி வாழையாக தொடர்வது வருத்தமளிக்கிறது! வாங்ய அடிகளின் அடையாளத் தழும்பு. மாறுவதற்குள் சந்தோஷ் நாராயணனின் இசை முந்திக் கொள்கிறது! 

சந்தோஷ் நாராயணன் இசையில் அந்த‘தென்கிழக்கு தேன் சிட்டு…’ பாடலும் அதில் ‘தீ’யின் குரலும் சேர்கையில் செவிகளில் தீப்பற்றிக் கொள்கிறது.

அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன்" என்ற அம்பேத்காரின் முழக்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பசியின் கொடுமையையும், ஒரு வாய் சோற்றிற்காக சிவனைந்தனின் பரிதவிப்பையும், கல்வி மட்டுமே நம்மை வழிநடத்தும் என்ற பார்வையில் நம் முன்னே பல காட்சிகள் நிழலாடும் வகையில் படத்தினை எடுத்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ்Mari Selvaraj அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

கந்தர்வன் சிறு கதைகள்

 தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படாத எழுத்தாளர் தான் கந்தர்வன். அவரின் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அத்தனையும் தொழிலாளர்...