பிரிந்துபோய்விட்ட உன்னை புகைப்படத்தில் பார்த்தவிட்டபொழுது நதி ததும்பிய கண்களால் மூழ்கிப்போனேன் எவ்வளவு காதலாய் என்னிடமிருந்த உன்னை அறிமுகம் செய்த காலமே பறித்துக்கொண்ட போனதில் செத்துத்தான் போனேன்.எத்தனை அந்நோன்ய நாட்கள் எத்தனை விரகம் தீர்ந்த இரவுகள் இப்போது என்னிடம் இதுபோன்ற எவையுமே என்னிடமில்லை!நோயில் துடித்து துவண்ட கணங்களையெல்லாம் உன் மென் விரல்களால் கோதி சரி செய்தாய் எப்பொழுதும் உன்னிலிருந்து விகசிக்கும் மலர்களிலிருந்து தேன் துளிகளை என் பசித்த பொழுதுகளில் தெளிக்கத் தவறியதே இல்லை.
என் வலியெல்லாம் உன் வலியாக்கிய உன் விசாலமான அகத்தை இப்போது எங்கு தேடியும் எதுவுமில்லை என்னை நீயாகவே மாற்றிக்கொண்ட உன் ப்ரியத்தின் முன் நான் வெற்றிடத்தின் சூன்யமாகத்தான் இருக்கிறேன் திரும்பவும் அழைக்க முடியாத தூரத்திலிருக்கும் உன்னிடம் திரும்பவும் என் அன்பைக் கோரும் பாக்யத்தை இழந்துவிட்டேன்.நீ வாங்கித் தந்த உடுப்புகளும் உன் நாணயங்களும் என்னிடமிருந்து உன்னை என்னிடம் வைத்திருக்கின்றன அந்த ஆடைகளை உடுத்துகிற தருணங்களிலெல்லாம் நான் தொட்டுக் கிள்ளிய அந்த பிள்ளை முகம் இமைகளிடையே மிதந்து மறைகின்றது என்னைப் பிரிந்து தவிக்கின்ற உன்னில் அழுவதற்கென்று கண்ணீரில்லை என்பதை அறிகிறபோது கருணையற்ற விதியையும் காலத்தையும் என்னையும் சேர்த்து புதைத்துவிடத்தான் தோன்றுகின்றது.
இப்பிறப்பினிடையில் தூய அன்பற்ற இருந்த என்னிடம் எங்கிருந்தோ வந்த உன் கடலளவு காதலில் பிறப்பின் பயனை அடைந்துவிட்டதாகவே திருப்தியுறுகிறேன் உனக்கும் எனக்குமான இடைவெளியில் நீளமாகிவிட்டபோதும் நானென்வோ உன்னருகில்தான் இருக்கின்றேன் உன்னிலேயேதான் இருக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக