வியாழன், 18 நவம்பர், 2021

ஷார்ஷா பன்னாட்டு புத்தகக் கண்காட்சி

 கடந்த ஒரு மாதமாக கடுமையாக பணிச்சூழலுடனும் முதுகு வலியுடனும் அவதிப்பட்டுக் கொண்டிருந்த என்னை, 'நீயும், நித்யா குமாரும் எப்படியாவது வந்தே ஆகவேண்டும்'  எனப் பாலாஜி அண்ணன்  அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர் குழும புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைத்தபோது மறுக்க முடியவில்லை. 

'என்ன செய்யலாம்? போவோமா இல்லை வேண்டாமா..?' என்ற எண்ணற்ற கேள்விகளுடன்தான் குமாரை அழைத்தேன்.  முடிவு  உங்கள் கையில் நீங்கள் செல்வதாக இருந்தால் மட்டுமே நானும் வருவேன் என்பதால் உங்க முடிவைப் பொறுத்தே நானும் முடிவெடுக்க இயலும் என்று சொல்லி எனது அத்தனை கேள்விகளையும் தூண்டில் நரம்பை நண்டு நறுக்கி விடுவதைப் போல 

இது நமது குழும நிகழ்வு அனுமானாக இல்லையென்றாலும் அணிலாகவாது இருக்க வேண்டுமென்ற ஆசையும் அக்கறையும் எனக்குள் இருக்க,  சரி போகலாம் என முடிவு செய்தேன். அதன் பின் 'எனக்கு அபுதாபியில்தான் இன்று வேலை... மூன்று மணிக்கு மேல் நாம் அங்கிருந்து கிளம்பலாம் 'என்று குமாரிடம் பேசி முடிவு செய்து அதன்படி மூன்றரை மணிக்கு அவரின் அலுவலகம் சென்று அழைத்துக் கொண்டேன்.

நாங்கள் இருவரும் நான்கு மணிக்குப் புறப்பட்டு மெதுவாக பேசிக்கொண்டே பேனோம். 

எப்பொழுதும் வியாழக்கிழமை மாலைப் பொழுதில் ஷேக் சயீத் ரோடு வாகன நெரிசல்களுடன் இருக்கும், அதுவும் நேற்று அநியாயத்திற்கு வாகன நெரிசலுடன் ஆங்காங்கே காதலன் காதலியும் முத்தமிட்டுக் கொள்வதைப் போல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முத்தமிட்டுக் கொள்ள. ஜெபல்அலியைக் கடக்கவே இரண்டு மணி நேரம் ஆனது. 

கந்தூத்தில் கொஞ்சம் இடுப்பு வலியைப் போக்கலாம் என்று நினைத்து, இதமான குளிர்காற்றை உடம்பில் வாங்கியபடி பேசிக் கொண்டே டீ சாப்பிட்டு,  இடுப்பு வலியையும் சற்றே குறைத்து மீண்டும் பயணப்பட்டோம். அண்ணன் பாலாஜி சொன்னதைப் போல இந்த இடுப்பு மட்டும் இல்லையெனில் இன்னும் இரண்டு நாள் கூட அன்னம் தண்ணி இல்லாமல் கார் ஓட்டுவேன். 

துபாய் நகரம் எனக்கு எவ்வளவு பழக்கப்பட்ட இடமாக இருந்தாலும் கூட போக வேண்டிய இடத்திற்கு சரியாக என்னால் எப்போதும் போக முடிவதில்லை, துபாய் நகரம் இரவு நேரத்தில் பருவ வயதில் முதல் காதலியின் புன்னகையை போல் புன்னகைக்க, நான் சாலையை மறந்து தடுமாறிப் போவது வழக்கமாகிப் போகிறது ஒவ்வொரு முறையும். அதேதான் இந்த முறையும்.

தொடர்ந்து வாகன நெரிசலுக்கிடையில் ஷார்ஷாவை நெருங்கிய பொழுது அண்ணன் பாலாஜிடமிருந்து அழைப்பு வந்தது. எந்த இடத்தில் வருகிறீர்கள் என்றார், குத்து மதிப்பாக ஷார்ஷா பாலத்திற்கு அடியில் வந்துவிட்டேம் என்றதும், 'ரொம்பச் சந்தோசம்... அண்ணாச்சி வீட்டிற்கு போக வேண்டாம்... நேர புக்பேர் போங்க... நானும் வந்துவிடுகிறேன்' என்றார். 

புக் பேர் போகும் வழியை அண்ணன் குமார் சரியாகத்தான் சொன்னார் இந்த வண்டி என்னவோ மதுரையை சுற்றிய கழுதை வெளியில் எங்கேயும் தங்காது என்பதைப் போல் அண்ணாச்சியின் சத்திரத்தைச் சுற்றியே வர கூகுள் வழிகாட்டியை நாடவேண்டியதாகிப் போச்சு எங்களுக்கு. 

அப்பவே அப்பனாத்தா பேச்சைக் கேட்காதவன் இப்ப கூகுள் பேச்சைக் கேட்கப் போறேன். அது மூணாவது வழியில போன்னு சொன்னா நான் ரெண்டுல போவேன். இப்படிக் கூகுள் ஒருபுறம் வழிகாட்ட, நான் ஒருபுறம் போக, எப்படியோ புத்தகக் கண்காட்சி அரங்கை அடைந்தோம்..., ஒன்றரை மணி நேரப் பயண தூரத்தை கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு மேலாக ஆக்கிவிட்டது. அபுதாயிலிருந்தே ஆரம்பித்த வாகன நெரிசல். தொடர்ந்து வாகன விபத்துக்களைப் பார்த்தும் கூட வாகன ஓட்டிகள் எப்பவும் போல் நான் முந்தி நீ முந்தி எனப் பயணித்தது வேதனைக்குரியது. 

புத்தகக் கண்காட்சிக்கு உள்ளே நுழைந்ததும் தமிழ் புக் ஸாடால் எங்கே இருக்கிறது என்று தேடி அலைந்தும் கண்டு பிடிக்கவே முடியவில்லை. எவ்வளவு நெரிசலான திருவிழாக் கூட்டத்திலும் தாயின் சேலையை அடையாளம் கண்ட பிள்ளையைப் போல அண்ணன் பாலாஜியை அடையாளம் காண, அந்த மகிழ்வான அணைப்பு எங்களின் பயணத்தின் களைப்பைப் போக்கியது.  

எங்களுக்கு தமிழ் புக் ஸ்டால் எங்கே இருக்கிறது என்று மீண்டும் தேடிப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது ! தேடுகிறேம் ...தேடுகிறேம்... எங்கு பார்த்தாலும் மலையாள புத்தகங்கள் ஒவ்வொன்றும்  தலையணை சைசில், எண்ணற்ற கதைகளை சுமந்து அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். ஆங்காங்கே ஸ்டால்களில் மலையாள எழுத்தாளர் தங்களின் படைப்புகளைப் பற்றி  விளக்கிக் கொண்டிருந்தார்கள். அங்கு நின்ற மலையாளிகளின் கூட்டத்தைப் பார்த்தபோது மலைப்பாக இருந்தது. ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் மலையாளிகள்தான் முக்கால்வாசி இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

ஆம் அவர்கள் அறிவார்ந்த சமூகம் என்பதை மேலும் மேலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள், 

தமிழெங்கே என அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கையில் எழுத்தாளர் தெரிசை சிவா எங்களுடன் சேர்ந்து கொண்டார். எங்கே இருக்கிறது தமிழ் பதிப்பகம் என்ற எனது கேள்விக்கு அவரிடமிருந்து வந்த பதில் இங்கெல்லாம் இருக்காது...எங்காவது ஒரு ஓரமா இருக்கும் என்பதாய் இருந்தது. மனசுக்கு வேதனையாக இருந்தாலும் அதுதான் உண்மையாகவும் இருந்தது. 

சாலையோர ஹோட்டலில் சாப்பாடு ரெடி என்ற விளம்பர பலகையைப் போல் இங்கு தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் என்ற விளம்பரத்துடன் ஒரு ஓரமாக தமிழ் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான புத்தகங்கள் கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்து விற்காத பழைய புத்தகங்களாகவே இருந்தது. சிறிது நேரம் அங்கு நிற்பதைத் தவிர வேறொன்றும் வாங்கும் மனநிலையைக் கொடுக்கவில்லை சுற்றிலும் இருந்த மலையாள விளம்பரங்களும் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலையாளப் புத்தகங்களும்.

புத்தக வெளியீடு நடக்கும் 'ரைட்டர்ஸ் போரம்' நோக்கி நடந்தோம்.

விழா நிகழ்வுகளை எப்பவும் போல் குமார் எழுதுவார் என்று நினைக்கிறேன்.

நன்றி.

-பால்கரசு-



கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...