வெள்ளி, 26 நவம்பர், 2021

ஸ்னெஹி எனும் நாய் புத்தக விமர்சனம்

சகோதரர் கவிஞர் சிவமணி அவர்கள் எனது நண்பர்கள் மூலம் எனக்கு அறிமுகமானபோது 'மௌனச் சிதறல்கள்' என்னும் கவிதை நூலை வெளியிட்டிருக்கும் கவிஞராகத்தான் அறிமுகம் செய்யப்பட்டார். அவரின் கவிதைத் தொகுப்பில் ஒரு சில கவிதைகள் என் மனதிற்கு நெருக்கமானதாகவும், பள்ளிப் பருவத்தில் நான் கடந்துவந்த பாதையை மீட்டெடுக்கும் விதத்திலும் இருந்தது. 

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவரின் கவிதைகளைப் பற்றி நிறைய பேசியதுடன் அடுத்தடுத்து நீங்கள் வெளியிடப் போகும் உங்கள் கவிதைத் தொகுப்புகள் வெறும் காதலை மட்டுமே பேசாமல், இச்சமூகத்தின் மீது பாசி போல் படர்ந்திருக்கும் அழுக்குகளையும் சுட்டிக்காட்டும் தொகுப்புகளாக மலரட்டும் என்று சொன்னேன். 

அவர் எழுதிய 'ஸ்னெகி எனும் நாய்' சிறுகதைகதைத் தொகுப்பை ஆசிப் மீரான் அண்ணாச்சியின் சத்திரத்தில் நடந்த பிலாலை வழியனுப்பும் விழாவுக்குச் சென்றபோது எனக்குக் கொடுத்தார். வாசித்துவிட்டு சில வரிகளையாவது எழுதாமல்  என்னால் இருக்க முடியவில்லை. இச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்துக் கதைகள் இருக்கிறது அந்த பத்துக் கதைகளையும் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள நண்பர்களின் அனுபவத்தையும் வைத்தே எழுதியிருக்கிறார் என்பதை வாசிக்கும் போது நம்மால் உணரமுடிகிறது.

முதல் கதையின் கதைக்கரு இச் சமூகத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் காலம்காலமாகத் தூக்கிச் சுமக்கும் மனநிலையை ஒத்ததாக இருக்கிறது. தன் பிள்ளை முதல் மார்க் வாங்க வேண்டும் என்ற பேராசை இருக்கிறதே தவிர தன் பிள்ளையைச் சிறந்த மனிதனாக வளர்க்க நினைப்பதில்லை என்ற உண்மை கதையில் விரியும் போது வருத்தத்தையே தருகிறது. அதிலும் மிகப்பெரிய வலியைத் தரக்கூடியது ஸ்பெசல் சைல்ட் என்று சொல்லப்படும் சற்றே மனவளம் குன்றிய குழந்தைகளை வளர்ப்பதுதான். அப்படி ஒரு குழந்தையைப் பார்த்துப் பார்த்து வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு எவ்வளவு பெரிய சவாலாக காரியம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இறைவன் எல்லோருக்கும் அந்தப் பாக்கியத்தை கொடுக்கமாட்டான் அந்தக் குழந்தையை வளர்த்தெடுக்க தகுதியான பெற்றோர்களிடம் மட்டுமே அந்தக் குழந்தைகளை இறைவன் கொடுக்கிறான் என்பதுதான் உண்மை. அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் கடவுளுக்கு மேலானவர்கள். இக்கதையில் அப்படி ஒரு தகப்பன் தன் மகன் மதிப்பெண் பெறவில்லை என்று வருந்தும் தகப்பனுடன் பேசுவது சிறப்பாக வந்திருக்கிறது. இக்கதை என் மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்தது.

ஸ்னேகி என்னும் நாய் கதைதான் புத்தகத்தின் தலைப்பாக இருந்தது, நாய் வளர்ப்பில் பலருக்கும் இருக்கும் சிக்கல்கள்தான் இக்கதைச் சுருக்கம், பணிச்சூழல்கள் காரணமாக பல இடங்களில் வீடு மாறும்போது அல்லது ஊர் விட்டு ஊர் போகும்போது கூடவே தன் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளை கொண்டு போகமுடியாமல் எங்காவது ஒரு இடத்திலோ அல்லது தெரிந்த நபர்களிடமோ விட்டு விட்டு செல்லும்போது அந்தப் பிராணிகளை விட்டுப் பிரியமுடியாத உளவியல் சிக்கல்களை சொல்கிறார். ஆடு வளர்ப்பது அறுக்கத்தான் என்று தெரிந்தாலும் அந்த ஆட்டை கரிக்கடைக்காரரிடம் விற்றுவிட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் படுத்து அழும் என் அம்மாவின் நினைவுகளை எனக்கு இக்கதை ஞாபகத்தில் கொண்டு வந்து காட்சிப்படுத்தியது. பொதுவாக எந்த ஒரு பிராணியையும் வீட்டில் வைத்து வளர்த்துவிட்டால் அதைப் பிரிவது எவ்வளவு மன உளைச்சலைக் கொடுக்கும் என்பதை நான் அறிவேன். அது இக்கதையில் நன்றாகக் கடத்தப்பட்டிருந்தது.

உயில் என்ற சிறுகதை. மனிதனுக்கு மட்டுமே இறப்பின் மீது பயம் வருகிறது. மனிதனுக்கு மட்டுமே எது வாழ்வு, எது சாவு, எது மறையக் கூடியது எனத் தெரிந்தும், தன் இளமையில் முதுமைய நோக்கிய சிந்தனைகளும் உயிர் பயமும் வருகிறது. இருக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை என்று தெரிந்த மனிதன் பொருள் தேடுவதிலையே தன் வாழ்வை இழந்து விடுகிறான். மனித வாழ்வில் இருக்கும் சிக்கலை தனது கேள்விகள் மூலம் முடிவதும், அதே கேள்வியைக் கொண்டே அம்முடிச்சை அவிழ்ப்பதுமாக இக்கதையை நகர்த்திருப்பது பாராட்டுக்குரியதாக இருக்கிறது. 

வாக்கு என்ற கதை வாடகை வீட்டில் இருக்கும் சிக்கல்களை பேசுவதுடன், ஒரு மனிதனுக்கு வீடு என்பது வாழ்விடம் மட்டுமில்லை அது ஒரு அடையாளம் என்பதைச் சொல்ல வந்தாலும் வேறு பாதையில் நகர்ந்து மேலோட்டமாகவே பேசுகிறது என்பதால் கதையில் அழுத்தமில்லை. இக்கதையின் போக்கை சற்றே மாற்றி இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால் சிறப்பான கதைகளில் ஒன்றாக இருந்திருக்கும்.

கின்டில் என்ற கதை புத்தகப் பிரியரான பவித்ரன் பிழைப்புத் தேடி தாய்நாடு விட்டுப் போகும்போது அங்கே புத்தகம் வாசிக்கமுடியாமல் போவதையும் அதற்காக அவன் படும் பாட்டையும் பேசி மற்றொரு பக்கமாய் நகர்கிறது. அவன் புத்தகத்தையும், தாய் மண்ணின் அருமையை உணர்வது தான் கதைக் கரு என்றாலும் சில இடங்களை வாசிக்கும்போது ரொம்பவும் மிகைப்படுத்தி எழுதியிருப்பது போல் தோன்றியது.

தாயுமானவர், ராசி மற்றும் ஆயில்யம் இந்த மூன்று கதைகளையும் மற்ற கதைகளுடன் ஒப்பிட்டு நோக்கினால் இக்கதைகளின் எழுத்துநடையில் சிறப்பான மாற்றம் தெரிகிறது. அந்த எழுத்து நடை கதையை அழகாய் நகர்த்துக்கிறது. இது எழுத்தாளரின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இக்கதைகளில் ஆசிரியர் பிற்போக்குத்தனத்தையே அதிகமாய் புகுத்தியிருக்கிறார்.

ஒரு ஆண் இல்லையென்றால் பெண்ணால் வாழமுடியாது என்பதைப் போலவும், பெண் என்பவள் ஆண்களின் அரவணைப்பில்தான் வாழமுடியும் என்பதைப் போலவும் இக்கதைகளைச் சொல்லியிருக்கிறார். உண்மையில் மனைவி இறந்துவிட்டால் ஆண் தனியாக பிள்ளைகளை வளர்க்க முடியாது, ஆனால் அதே நேரத்தில் கணவன் இல்லாத ஒரு பெண்ணால் குழந்தைகளைச் சிறப்பாக வளர்த்தெடுக்க முடியும். அது மட்டுமில்லாமல் பெண் என்பவள் தனக்கான வாழ்க்கைத் துணையை தானே தேர்ந்தெடுக்கும் சுய சிந்தனைகளற்ற சடலமாகவும், தன் வாழ்க்கையை ஏதோ ஒரு சூழ்நிலையில் மற்றவர்கள் விருப்பத்திற்கு வாழ்வது போலவும், ராசி பலன் நேரம் சரியில்லை போன்ற பிற்போக்குச் சிந்தனைகளையும் கொண்ட கதைகளாகவே இவைகள் இருந்தது. 

மொத்தத்தில் எழுத்தாளர் சிவமணி எடுத்துக்கொண்ட அத்தனை கதைக்கருவும் அவசியம் பேசப்படவேண்டியவை ஆனால் அவர் அவற்றைச் சரியாக பேசவில்லை என்பதுதான் எனக்கு இக்கதைகளில் குறையாகத் தெரிந்தது. இச் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் சில குறைகளை அவரிடம் நேரடியாக பேசிவிட்டேன் என்பதால் இங்கு குறைகளைச் சுட்டி எழுத வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

எழுத்தாளர் சிவமணிக்கு இது முதல் சிறுகதைத் தொகுப்பு என்பதாலும் சரியான நண்பர்களின் வழிகாட்டுதல் இல்லையென்பதால் சில குறைபாடுகள் இருந்தது உண்மைதான். அத்தனை குறைகளையும் களைந்து அடுத்த புத்தகம் இன்னும் சிறப்பான கதைக்களங்களுடன் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிவமணியின் வேட்கையும் எழுத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதுதான். அது நிச்சயம் நடக்கும். 

உங்கள் எழுத்துக்கள் மென்மேலும் சிறப்பாக அமைய என் அன்பும் வாழ்த்துகளும் சிவமணி.

-பால்கரசு- 

27/11/2021

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...